2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (05) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வுகூறல் வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பிரசாரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சையில் குறிப்பிட்ட வினாக்கள் வரும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களை மேற்கொள்வதும் சட்டவிரோதமானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
