களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் ஹொரண பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மில்லனிய – படகொட வீதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பாக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரனைப் பார்ப்பதற்காகச் செல்வதாக இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, பொலிஸார் மோட்டார் சைக்கிளையும் சந்தேகநபர்களையும் சோதனையிட்டனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு சோற்றுப் பார்சல்களுக்குள் இருந்த மிளகாய் சம்பல் சிறிய பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களிடம் இருந்த கைப்பேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அங்குருவாதொட்ட பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
