கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று இளைஞர்களை எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்குள்ள குற்றக் குழுவினரிடம் சிக்கவைத்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 25, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று இளைஞர்கள் டுபாய் வழியாக எத்தியோப்பியா சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதற்காக விமானச் சீட்டு மற்றும் விசா செலவுக்கென 64 இலட்சம் ரூபாய் பெறப்பட்டதுடன், கனடா சென்ற பின்னர் ஒவ்வொருவரிடமிருந்தும் 100 இலட்சம் ரூபாய் பெறுவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியா சென்றடைந்த பின்னர், இளைஞர்கள் அங்குள்ள குற்றக் குழுவினரால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க ஒருவருக்கு 30 ஆயிரம் அமெரிக்க டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, உறவினர்கள் கிளிநொச்சியைச் சேர்ந்த தரகரிடம் சுமார் 200 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய பொலிஸாரும் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் மூன்று இளைஞர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பாகிஸ்தானியர்களும், ஒரு எத்தியோப்பியரும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட இளைஞர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடற்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
