வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை இவ்வருட இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்கள் மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிலையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்று வரும் பாடசாலை கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய தேவையான ஆலோசனைகளையும் பிரதமர் வழங்கினார்.
அதேவேளை, இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைத்த குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.
