கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த ஒவ்வொரு தலைவரும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் நம்பிக்கையை ஏற்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்தனர். நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களின் வரவேற்பைப் பெற்றார்.
ரணில் விக்கிரமசிங்க சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து நம்பிக்கையை வென்றார். ஜே.ஆர். ஜெயவர்த்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி, தொழிற்சாலைகளை உருவாக்கி, சர்வதேச உறவுகளை பலப்படுத்தி மக்கள் ஈர்ப்பைப் பெற்றனர்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் அவ்வாறு மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய எந்தவொரு திட்டமும் இல்லை. இந்த அரசாங்கத்தினால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களும் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியாததால், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸ் துறையைப் பயன்படுத்தி, முறையான சாட்சியங்கள் இல்லாமல் எதிர்கட்சியினரை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலமே அரசாங்கம் தனது இருப்பைத் தக்கவைக்கப் பார்க்கிறது. முறையான சான்றுகள் இன்றி வழக்குகளைத் தாக்கல் செய்வதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவிப்பதை நாம் காண்கிறோம்.
ஜனநாயக ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்றும் சமநிலையில் இயங்க வேண்டும். ஆனால், தற்போது அரசாங்கம் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. இதனால் கிராம மட்டம் வரை சர்வாதிகாரப் போக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச சமூகமும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக் கொள்வதால், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகள் தடைப்பட்டு நாடு தனிமைப்படுத்தப்படும்.
எனவே, அரசாங்கம் இந்த ஜனநாயக விரோத அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தவறினால், இந்த சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விட்டாலும், அதில் வென்றாலும் அல்லது தோற்றாலும் அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்படும். இறுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
