முச்சக்கர வண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்த அவர், அதற்குப் பதிலாக அவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “முச்சக்கர வண்டித் தொழிலில் நுழைவதற்கான வயதெல்லையை 40 ஆக உயர்த்த எதிர்பார்த்துள்ளோம்.
இளைஞர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு முச்சக்கர வண்டியுடன் வீதிக்கு வரக்கூடாது. அதனால்தான் கல்வித் துறையில் இத்தகைய மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
