கல்கமுவ, கோஹொம்பங்குலம பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது இறுதிச் சடங்குகளுக்காக தயார்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கோஹொம்பங்குலம பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவரே இவ்வாறு உயிருடன் திரும்பி வந்துள்ளார். இவர் வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தடுப்புக்காவலில் உயிரிழந்துவிட்டதாக நன்னேரிய பொலிஸார் உறவினர்களுக்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். கிராமம் முழுவதும் மரண அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பந்தல்கள் அமைக்கப்பட்டு தகனத்திற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் கீர்த்திசேன திடீரென உயிருடன் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார். அவருக்காக அமைக்கப்பட்டிருந்த இறுதிச் சடங்கு வீட்டிற்குள் அவர் உயிருடன் நடந்து வந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் கோஹொம்பங்குலம கிராமமே அதிர்ச்சியிலும் நம்ப முடியாத குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
