வாடகைக்கு அமர்த்தப்பட்ட சொகுசு கார் ஒன்றைப் பயன்படுத்தி வென்னப்புவையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகையான கசிப்பு கடத்தல்காரரின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள, 8 பொலித்தீன் உரைகளில் அடைக்கப்பட்ட 27,000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிந்தெல்பிட்டிய பகுதியில், சந்தேகத்துக்குரிய இந்தக் கார் மறிக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது.
இதன்போது காரின் பின்பக்க ஆசனங்கள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மதுபான உரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த மதுபானத் தொகுதி ஹிரண பொலிஸ் பிரிவின் பிரபல மதுபானக் கடத்தல்காரரான ‘சலா’ என்பவருக்குச் சொந்தமானது என்பது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் பாணந்துறை கல்துடா மற்றும் பாணந்துறை ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் தாம் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்ததால், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
