எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இடதுகை துடுப்பாட்ட வீரரான திலக் வர்மாவை சேர்க்க அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தீவிரமாக பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் , மத்திய வரிசையில் வலதுகை துடுப்பாட்டக்காரர்கள் மட்டுமே அதிகம் இருப்பதைத் தவிர்க்க, இடதுகை துடுப்பாட்ட வீரரான திலக் வர்மா சரியான தேர்வாக இருப்பார் என நிர்வாகம் கருதுகிறது.
இதேவேளை, ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகிய மூத்த வீரர்களின் காயம் மற்றும் உடற்தகுதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கக்கூடிய இளம் வீரர்களைத் தயாராக வைக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அதற்கு முன்னதாக செப்டம்பர் 13 முதல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
