மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடையும் பென்குயின்களுக்கு, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் காயங்கள் விரைவாகக் குணமடைய உதவும் வகையில், சிலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தாமிரம் மற்றும் துத்தநாக நுண்துகள்கள் கொண்ட சிகிச்சை உடையொன்றை உருவாக்கியுள்ளனர்.
நான்கு கால்களைக் கொண்ட விலங்குகளுக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த தாமிர உடைகளை அடிப்படையாகக் கொண்டு, பென்குயின்களுக்கு ஏற்ற வகையில் இந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பென்குயின்களின் காயங்களைப் பாதுகாப்பது சவாலானதாக இருப்பதாக ஹம்போல்ட் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவரும், மையத்தின் தலைவருமான தோமஸ் பினோ தெரிவித்துள்ளார்.
பென்குயின்களுக்கு கழுத்தில் அதிக நெகிழ்வுத்தன்மை இருப்பதால், அவை தையல்களை இழுத்து அகற்றவோ அல்லது குணமடைந்து வரும் காயங்களை மீண்டும் திறக்கவோ வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடை உலோகத்தால் செய்யப்பட்டதைப் போன்று தோற்றமளிப்பதில்லை. சிவப்பு நிறத் துணியின் இழைகளுக்குள் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் நுண்ணிய துகள்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
காயங்கள் குணமடையும் காலத்தில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சில நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இந்த உலோகங்கள் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், துத்தநாகம் புதிய இரத்த நாளங்கள் உருவாக உதவுவதன் மூலம் சேதமடைந்த திசுக்கள் விரைவாகக் குணமடையவும் பங்களிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சிகிச்சை உடை, சிலியின் கோகிம்போ பகுதியில் அமைந்துள்ள ஹம்போல்ட் பாதுகாப்பு மையத்தில் ஐந்து பென்குயின்களுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி வலைகளில் சிக்குவது உள்ளிட்ட மனிதச் செயற்பாடுகளால் பென்குயின்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதுடன், காயமடைந்த பறவைகளின் மறுவாழ்வை மேம்படுத்துவதும் அவசியம் எனப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
