புதிய விடுதித் திட்டத்தின் மூலம் 16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கி வைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஸ்பகுமார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2025ஆம் ஆண்டுக்கான விடுதி புனரமைப்பு பணிகளுக்காக 376 மில்லியன் ரூபாவையும், 2026ஆம் ஆண்டின் விடுதி புனரமைப்புக்காக 453 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான விடுதி புனரமைப்புக்காக 400 மில்லியன் ரூபாவையும், 2026இல் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.
நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் உள்நாட்டு நிதியாகும். நாம் கடன் பெற்று இந்த விடுதித் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதேபோல், 2025 மற்றும் 2026 வரவு – செலவுத் திட்டங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் புதிய விடுதிகளைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையும் உள்ளது.
அதாவது, வெளிநாட்டுக் கடன்களின் கீழ் வடமேல் நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் சவூதி அபிவிருத்திக்கான கடனின் கீழ் விடுதிகளுக்காக இந்த ஆண்டு 321 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மருத்துவ பீடத்தை நிறுவும் திட்டத்தின் கீழ் சவூதி கடனின் மூலம் விடுதியொன்றைக் கட்டுவதற்காக 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
விடுதிகளை நவீனமயமாக்குவதற்காக வடமேல் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 10.46 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டிற்காக 466 மில்லியன் ரூபாவும், 2026ஆம் ஆண்டிற்காக 662.46 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விடுதி வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 ஆகும். இலங்கையின் அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒட்டுமொத்த விடுதிக் கொள்கையொன்றைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாரித்து வருகின்றது. இதில் தனியார் விடுதிகள் தொடர்பான வழிகாட்டல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள் தனிப்பட்ட முறையில் விடுதிகளையோ அல்லது வீடுகளையோ வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால், அதற்கான வழிகாட்டல் எதுவும் இருக்கவில்லை. அவற்றில் இருக்கவேண்டிய கட்டணங்கள், குறைந்தபட்சத் தரநிலைகள் குறித்த வழிகாட்டல் இதுவரை இருக்கவில்லை. ஆனால், இப்போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாகாத வகையில் வழிகாட்டல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.
முன்மொழியப்பட்ட கொள்கை தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வரம்பிற்குட்பட்ட அரச பல்கலைக்கழகங்களால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அரச பல்கலைக்கழகங்களுடன் நேரடியாக இணைந்து செயல்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளை இதில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்படவில்லை.
மாணவர்களுக்கு நியாயமான, வெளிப்படையான, பாதுகாப்பான, அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விடுதி வசதிகளை உறுதி செய்வதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி தேவைகள் குறித்தும் இந்தத் திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தப்பட்டு தீர்வு காண எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக விடுதிகளைப் பெற முடியாத மாணவர்கள், பதிவுசெய்யப்பட்ட தனியார் விடுதிகளில் தங்குமிட வசதிகளைப் பெற முடியும் என்பதையும் இந்தக் கொள்கை ஏற்றுக்கொள்கிறது.
தனியார் விடுதிகள் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ், தங்குமிட வசதிகள், சுகாதாரம், பாதுகாப்பு, அணுகல் வசதிகள், கட்டுப்படியாகும் விலை மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நியாயமான முறையில் இடங்களை ஒதுக்குதல், குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்தல், தனியார் விடுதி கண்காணிப்புக் குழுவினால் கண்காணிக்கப்படுதல், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்தல் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்காத விடுதிகள் மீது தேவையான நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களிலிருந்து பெறப்படும் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டு கொள்கை வரைவு திருத்தப்பட்ட பின்னர் இறுதி செய்யும் செயல்முறைக்கு அனுப்பப்படும்.
இந்த 55 விடுதிகள் மூலம் நகர்ப்புறங்களில் இருந்து தூரத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் இரண்டு விடுதிகளுடன் இத்திட்டத்தை தொடங்கினோம். அதன்படி, தற்போது வவுனியா, கிளிநொச்சி, தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ, சப்ரகமுவ போன்ற பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அங்குதான் இந்தப் பிரச்சினை தீவிரமாக காணப்படுகின்றது.
மேலும், விடுதிக் கொள்கையில் அனைத்து மாகாணங்களிலும் தனிப்பட்ட முறையில் பெறக்கூடிய விடுதி வசதிகளும் வரம்பிற்குட்பட்டுள்ளதால், அரச – தனியார் பங்களிப்புத் திட்டத்தின் மூலம் உதாரணத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து காணியை வழங்குவதற்கான உடன்பாட்டின் அடிப்படையில் மேலும் விடுதிகளை நிர்மாணிக்கும் யோசனை குறித்தும் பரிசீலித்து வருகிறோம். அதுகுறித்து பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
தொழிற்பயிற்சி நிலையங்கள், சமுத்திர பல்கலைக்கழகம் மற்றும் தொழில்பயிற்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விடுதிகள் மற்றும் மாணவர் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
