2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடத்தப்பட்ட இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை மறைப்பதற்கும் தப்பிக்க வைப்பதற்கும் உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த கட்டளைக்கு அமைய ஆஜரான விஜேகுணரத்ன, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தான் குற்றமற்றவர் எனவும் வாதிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கின் மேலதிக விசாரணைகள் மற்றும் அடுத்தகட்ட வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
