நாளை வெள்ளிக்கிழமை (01) உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்கள் கொழும்பு நகரை மையமாக கொண்டு நடைபெறவுள்ளன. அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கொண்டாட்டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மே தின நிகழ்வுகளை அமைதியான முறையில் நடத்துவதற்கான சூழலை உருவாக்குதல், பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு பொலிஸ் மா அதிபர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கொழும்பு நகரை மையமாக கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் நடத்தப்படவுள்ள பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் வீதி வரைபடங்கள் குறித்த விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
