அரசாங்கம் நுகர்வோரையும் விவசாயிகளையும் ஒரே நேரத்தில் பாதிப்புக்குள்ளாக்கும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இதனால் நாட்டின் ஏழ்மையான மக்கள் பாரிய சுமைகளை சுமப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் இரண்டு அண்மைக்கால முடிவுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
முதலாவதாக, சோள இறக்குமதி மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், ஏற்கனவே புரதச்சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன.
இரண்டாவதாக, 150,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்ளுர் நெல் விவசாயிகள் தங்களது அறுவடையை முறையான விலைக்கு விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் அண்மைய கூட்டத் தொடரின் போது, இதில் பிரச்சினை இருப்பதை விவசாய அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், சந்தையில் தலையிடுவதற்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் திறன் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் மட்டுமே என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரிசி ஏகபோகத்தை உடைத்து, சிறு ஆலை உரிமையாளர்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘சக்தி’ அரிசி கூட்டுறவு நிறுவனம், மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி 2020 ஆம் ஆண்டில் மூடப்பட்டதையும் நான் விமர்சிக்கிறேன்.
‘சக்தி’ கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் ஆரம்பியுங்கள். நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாப்பதற்கான அவசர திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
