காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கில், நான்காவது சாட்சியாளரான சுமதிப்பால சுரேஷ்குமார் (முரளி) என்பவரிடம் மீண்டும் சாட்சியங்களைப் பதிவு செய்ய கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்த வழக்கில், சட்டமா அதிபர் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு வழங்கிய சாட்சியம் பலவந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாகக் கூறி, சரியான சாட்சியத்தை மீண்டும் வழங்க அனுமதி கோரி முரளி தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
இதன்படி, முரளியிடம் மீண்டும் சாட்சியங்களைப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
