ஐ.பி.எல் 2027 தொடருக்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தவைர் ஹர்திக் பாண்டியாவைத் தங்களது அணியில் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) நிர்வாகம் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக, சென்னை அணியிடம் இருந்து இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் ஷிவம் துபே ஆகிய இருவரிடமும் அதிக தொகையாக 10 கோடியை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிபந்தனையாகக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த உள்ளூர் வீரரான ஆயுஷ் மாத்ரே, கடந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்டதால், அவரை எப்படியாவது அணிக்குள் கொண்டுவர மும்பை முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது.
எதிர்கால நட்சத்திரமாகக் கருதப்படும் ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க சி.எஸ்.கே தயக்கம் காட்டி வருவதுடன், அதற்குப் பதிலாக (ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரராக) டெவால்ட் பிரெவிஸை அனுப்ப சி.எஸ்.கே முன்வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், அதிக தொகையான 10 கோடி தர முடியாது எனத் தெரிவித்து, ஹர்திக் பாண்டியாவோடு சேர்த்து வில் ஜாக்ஸையும் கேட்டுப் பெற சி.எஸ்.கே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐ.பி.எல் கிண்ணத்தை வென்று கொடுத்த அனுபவம் மிக்க ஹர்திக் பாண்டியாவை, ஒப்பந்தம் செய்ய பல அணிகள் போட்டியிட்டு வரும் நிலையில், இந்த டிரேட் பேச்சுவார்த்தை குறித்து சி.எஸ்.கே அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
