ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவினருக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்த அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான நீண்டகால திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
