கஞ்சிப்பான இம்ரான் என்பவரின் பிரதான நெருங்கிய சகாக்களில் ஒருவராகக் கருதப்படும் “ரத்மலானே சைமா” எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர் மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடொன்றில் இருந்தவாறு இலங்கையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களை வழிநடத்தும் பிரதான குற்றவாளியான கஞ்சிப்பான இம்ரானைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் முன்னதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்ற கஞ்சிப்பான இம்ரான், வெளிநாடுகளிலுள்ள தனது வலையமைப்பின் ஊடாக இலங்கையினுள் இடம்பெறும் கடத்தல்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தி வருவதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்திருந்தது.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பைப் பராமரித்து வரும் கஞ்சிப்பான இம்ரானின் பிரதான சகாக்கள் மற்றும் விநியோகஸ்தர்களை இலக்கு வைத்து புலனாய்வுப் பிரிவினர் இணைந்து பல விசேட நடவடிக்கைகளை தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர்.
