இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையையும், இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் ஒன்றிணைத்து மீள்கட்டமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இயங்கும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும், 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன.
இரு நிறுவனங்களும் தனித்தனியாக இயங்குவதால் வளங்கள் வீணடிக்கப்படுவதும், கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் செயலாளரின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவற்றை ஒருங்கிணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை கொண்டு வருவதற்காக 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு மூலம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் நிர்வாகம், ஆய்வு, பயிற்சி மற்றும் சேவைகள் மேலும் வினைத்திறனுடனும் ஒழுங்குமுறையுடனும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
