கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குறித்த நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்துக்கள் முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.
