தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றம், மழை வீழ்ச்சி முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி நிலை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுகிறது.
இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதால், விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் தங்களது செய்கை நடவடிக்கைகளை திட்டமிடுவது அவசியமாகியுள்ளது.
இதனை முன்னிட்டு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு ஏற்பாட்டில், புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோவினால் ஏற்படக்கூடிய வறட்சி தாக்கங்கள், விவசாயிகள் எதிர்நோக்கக்கூடிய சவால்கள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேலும் விவசாயிகள் தாங்களே மேற்கொள்ள வேண்டிய தழுவல் மற்றும் தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், விவசாயிகள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களது விவசாய முறைகளை மாற்றியமைத்து, பாதிப்புகளைக் குறைத்து, நிலையான உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியும்.
