இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (05) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி, இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மலையக மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
2025ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக பகுதிகளுக்கான இந்திய உதவித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
மேலும், வட்டவளை, அக்கரகப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
