தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் பொரளை, லேடிரைவ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயன்றிருந்தனர்.
பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
23 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொலை முயற்சியின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் இவரே என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றைய சந்தேகநபருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
