2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரும் குடியியல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாக இருந்து நீக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஷாங்க்ரி-லா விருந்தக தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித்த டி.பி. ஏகநாயக்க இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவியல் வழக்கில் இருவருக்கும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக குடியியல் வழக்கை தொடர விரும்பவில்லை என மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை முன்வைக்கப்படாததைத் தொடர்ந்து, இருவரையும் வழக்கிலிருந்து நீக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில், அவருக்கு எதிராக வழக்கை தொடரும் தகுதி தொடர்பில் ஆட்சேபனை முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு எதிர்வரும் அக்டோபர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
