பிரதம நீதியரசர் மற்றும் காவல்துறை மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளை காணொளியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சொகுசு வாகனமொன்றில் சென்ற சந்தேகநபர், காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்ல நுழைவாயிலுக்கு அருகில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்ததை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியதையடுத்து, கொழும்பு அவசரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற கறுவாத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் கைப்பேசியை ஆரம்பகட்டமாக பரிசோதித்தபோது, காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள், அதேபோல் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் தொடர்பான காணொளிகள் பதிவாகியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணையின்போது, காணொளிகளை பொழுதுபோக்காக பதிவு செய்ததாக சந்தேகநபர் தெரிவித்திருந்தாலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் தனது வசிப்பிடம் உள்ளிட்ட சில விடயங்களில் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அலுபொமுல்லை, அறுகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
