கடந்த வாரம் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி பயணித்தபோது கடுமையான காற்றுக் குலுக்கலுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய தலைமை விமானி, விமானப் பயணத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பரிசோதனையில் மனநிலையை பாதிக்கக்கூடிய பொருட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது இறுதியான முடிவு அல்ல எனவும், உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, தலைமை விமானியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையின் முடிவு மேலதிக உறுதிப்படுத்தும் பரிசோதனை தேவைப்படும் வகையில் இருந்துள்ளது.
இதையடுத்து, விமானியிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, பரிசோதனை முடிவுகள் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்பதால், இது தொடர்பில் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விசாரணை நிறைவடையும் வரை குறித்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் விமானப் பணிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி AI2379 விமானம் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி பயணித்தபோது கடுமையான காற்றுக் குலுக்கலுக்கு உள்ளானது.
இதன்போது விமானம் திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்ததாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 13 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று வெளியேறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (NDTV)
