கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 மெக்னிடியூட் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதுடன், நாட்டில் தேசிய அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும் பல பிராந்திய விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.34 மணியளவில் 103 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு கொலம்பியாவின் பல பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பெரெய்ரா நகரம் மற்றும் வேலே டெல் கௌகா பிராந்தியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் போகொடாவிலும் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதுடன், மரங்கள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் கடுமையாக அசைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வெனிசுவேலா, ஈக்வடோர் மற்றும் பனாமா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா தேசிய அனர்த்த நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவசரநிலையை எதிர்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கத்திற்கு விசேட அதிகாரங்கள் கிடைத்துள்ளன.
