மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான ‘குடு அஞ்சு’ என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகில் பிற்பகல் 1.20 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 54 வயதான நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அண்மையில் இரத்மலானை பகுதியில் ‘குடு அஞ்சு’வின் நெருங்கிய சகா ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
