கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளுக்கு அமைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரண தண்டனை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267ஆவது பிரிவின் அடிப்படையில் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் வெளிப்படுத்தி, நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான பேரழிவுகள் மீண்டும் எவருக்கும் ஏற்படாத வகையில் ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அல்லது கலந்துரையாடல்களில் எந்தவொரு விதத்திலும் தலையிடப் போவதில்லை எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
