பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது மட்டுமே நாட்டின் இறுதி இலக்கு அல்ல என்றும், நிலையான எதிர்காலப் பயணத்திற்குப் பரந்த அளவிலான பொருளாதார மற்றும் நிறுவன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற இலங்கைத் தொழில்சார் நிபுணர்களின் சங்கத்தின் (OPA) 39ஆவது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு அப்பால்” எனும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 39ஆவது வருடாந்த மாநாட்டில், OPA இன் உத்தியோகபூர்வ சஞ்சிகை (OPA Journal) பிரதமரிடம் கையளிக்கப்பட்டதுடன், 39ஆவது வருடாந்த மாநாட்டின் உத்தியோகபூர்வ இலச்சினை (Logo) வெளியிட்டு வைக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
கடந்த சில ஆண்டுகள் நமது நாட்டிற்கும் மக்களுக்கும் பாரிய சவால்மிக்க காலப்பகுதியாக அமைந்திருந்ததோடு, பொருளாதார, சமூக மற்றும் நிறுவன ரீதியாக நாடு பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது. அதனால் மக்களின் நம்பிக்கை சீர்குலைந்ததுடன் நாட்டின் எதிர்காலம் குறித்தும் பாரிய நிச்சயமற்ற தன்மை உருவானது.
ஆயினும், நாம் எதிர்காலத்தை நோக்கும்போது ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நெருக்கடியிலிருந்து மீள்வது என்பது மாத்திரம் நமது இறுதி இலக்கு அல்ல என்பதாகும்.

மீட்சியடைவதன் மூலம் அடித்தளம் மட்டுமே உருவாக்கப்படுகின்றது. ஒரு நாடு நிலையான எதிர்காலப் பயணத்தை முன்னெடுக்க முடிவதற்கு, இதனூடாக ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே சாத்தியமாகும்.
இந்த வருட மாநாட்டின் தலைப்பாகிய “இலங்கை முன்னோக்கி: பொருளாதார நெருக்கடிக்கு அப்பால்” எனும் எண்ணக்கரு உணர்த்துவதும் அதனையே ஆகும். நமது இலக்கு இயல்பு நிலையை அடைவதாக மாத்திரம் இருத்தல் ஆகாது. மாறாக பலமான நிறுவன முறைமை, பலமான பொருளாதாரம், தரமான பொதுச்சேவை மற்றும் ஒவ்வொரு பிரஜையும் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் நிலவும் ஒரு நாட்டை உருவாக்குவதாகவே இருத்தல் வேண்டும்
நாம் இருந்த இடத்திற்கே திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய, புத்தாக்கங்கள் நிறைந்த, அனைவருக்கும் நியாயமான ஒரு நாட்டை உருவாக்குவதே நமது முதன்மை நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்குப் பொருளாதார வளர்ச்சி அல்லது பௌதிக அபிவிருத்தியினால் மாத்திரம் இயலாது.

அதற்கு வெளிப்படைத்தன்மை மிக்க அரச நிர்வாகத்துடன், நாட்டின் அறிவு மற்றும் தொழில்சார் அனுபவங்களைச் சரியான விதத்தில் பயன்படுத்துவதும் அத்தியாவசியமாகும். இதனாலேயே OPA போன்ற தொழில்சார் அமைப்புகளுக்குப் பாரிய பொறுப்பு சுமத்தப்படுகின்றது என்றார்.
நமது நாட்டின் அனைத்துத் துறைகளினதும் முன்னேற்றத்திற்குத் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது பௌதிக வளங்களால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை.
மாறாக அந்நாட்டு மக்களின் அறிவு, திறன் மற்றும் அனுபவங்களை எந்தளவிற்கு நாட்டிற்காகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கும் தொழில்சார் நிபுணர்களுக்கும் இடையில் ஏற்படும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், சரியான கொள்கைகளை உருவாக்க வேண்டுமாயின் ஆராய்ச்சி, புள்ளிவிவரங்கள் மற்றும் நடைமுறை அனுபவங்களைக் கொண்ட தொழில்சார் நிபுணர்களின் கருத்துக்கள் அத்தியாவசியமாகும் என்பதே எமது நம்பிக்கையாகும். கொள்கை என்பது ஒரு காகிதத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
மாறாக அது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று நாம் வேகமாக மாற்றமடைந்து வரும் ஓர் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்ற பல விடயங்கள் உலகைப் புதியதொரு பாதையில் இட்டுச்சென்று கொண்டிருக்கின்றன.
தொழில்நுட்ப அறிவுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு தொழில்சார் நிபுணருக்கும் சமூகப் பொறுப்பும் ஒழுக்கநெறி சார்ந்த தலைமைத்துவமும் இருத்தல் வேண்டும். போலித் தகவல்கள் வேகமாகப் பரவும் இத்தகைய யுகத்தில், சான்றுகள் மற்றும் அறிவியல் அடிப்படையிலிருந்து கருத்துக்களை வெளியிடுவதும், ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாப்பதும் தொழில்சார் நிபுணர்களின் பிரதான பொறுப்பாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Andrew Patrick, Advocata நிறுவனத்தின் தலைவர் முர்தஸா ஜாபர்ஜி, OPA இன் தலைவர் ஜயந்தி கல்லெஹேவா, புதிய தலைவரும் மாநாட்டுக் குழுவின் தலைவருமான திசர த சில்வா, முதன்மைச் செயலாளர் பொறியியலாளர் ரவி ரூபசிங்க உள்ளிட்ட இலங்கைத் தொழில்சார் நிபுணர்களின் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
