சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்த 3 நாள் விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கடந்த 8ஆம் திகதி 14 மாவட்டங்களின் 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதி நாள் இன்று (10) ஆகும்.
நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்றைய சோதனைகளில் 31,155 வீடுகள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 8,069 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் கண்டறியப்பட்டதுடன், 1,864 இடங்களில் குடம்பிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சூழலை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தால் 1,079 பேருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், 711 பேருக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அபாய நிலை தொழிற்சாலைகள் (61%), கட்டுமான இடங்கள் (55.4%), மத வழிபாட்டுத் தலங்கள் (51.5%), பாடசாலைகள் (44.7%) மற்றும் அரச நிறுவனங்கள் (40.4%) என பல துறைகளிலும் அதிகமாக காணப்படுகிறது.
மொத்த குடம்பிகள் கண்டறியப்பட்ட இடங்களில் அதிகளவு வீடுகள் (58%) மற்றும் கட்டுமான இடங்கள் (22.4%) ஆகும்.
பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்து, டெங்கு பரவலை கட்டுப்படுத்த இந்த விசேட நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
