கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் குறித்த தம்பதியினரும் நேற்று மதியம் (12) படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக குறித்த வல்லம் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் தம்பதியரில் கணவர் ஒரு பிள்ளையை காப்பாற்றியுள்ளதுடன், மற்றைய பிள்ளையை மனைவி பிடித்துக் கொண்டு கரைக்கு நீந்திச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்த படகு ஒன்றிலிருந்தவர்கள் கவிழ்ந்திருந்த படகை கண்டு, அந்தப் பகுதியைச் சோதனையிட்டபோது விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மிதந்த நிலையில் இருந்த இருவரை முதலில் காப்பாற்றியவர்கள், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, பெண் மற்றைய பிள்ளையை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு கரைக்கு நீந்திச் செல்வதைக் கண்டு, அவர்களையும் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குறித்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியும் என தெரியவந்துள்ளது.
