மேற்கு வங்கத்தில் பாஜக தற்போது 184 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29 ஆம் திகதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, ஃபால்டா தொகுதிக்குட்பட்ட 285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஃபால்டா தொகுதி தவிர்த்து 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக 184 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அக்கட்சிக்கு இத்தேர்தலில் கடும் சவாலை கொடுத்துள்ளது பாஜக. 148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக தற்போதே 184 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அங்கே பாஜக-வே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
