மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயலிழந்த நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களால் அரச சொத்துகள் வீணடிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். செயலிழந்த நிலையங்களில் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நீண்டகாலமாகத் தடைப்பட்டுள்ளமை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
