22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு, இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மற்றும் பொதுச்செயலாளர் கசுன் சாமர ஜயசேகர ஆகியோரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை சுதந்திரம், சட்டவாட்சி, அதிகாரப் பகிர்வுக் கோட்பாடு மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பது என்பது ஒரு குறிப்பிட்ட தொழிற்துறைக்கு மட்டும் உரித்தானதல்ல என்றும், அது அனைத்துக் குடிமக்களின் கூட்டுப் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலம் அல்லது ஓய்வுபெறும் வயதை மாற்றுவது என்பது சாதாரண நிர்வாகத் திருத்தம் அல்ல எனத் தெரிவித்துள்ள அந்தச் சங்கம், இத்தகைய மாற்றங்களைச் செய்யும் முறை மற்றும் காலம் என்பன நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
அத்துடன், நீதித்துறை அமைப்பில் உள்ள தாமதங்கள் அல்லது திறனின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது, நீதித்துறையின் சுயாதீனம் அல்லது பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடையாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது சட்டத்துறையை மட்டும் சார்ந்த விடயம் அல்ல என்றும், முழு மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சியைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்றும் குறிப்பிட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டவாட்சிக்காகச் சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
