சுங்க அனுமதியும் தரப் பரிசோதனையும் இன்றி கடல் மார்க்கமாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 48.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து கையிருப்பு, நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபனை லெல்லம பகுதி அருகே மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த மருந்துப் பொதிகளை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, மருந்துகளும் அவற்றை ஏற்றிச் சென்ற வாகனமும் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த மருந்துத் தொகுப்பு இரண்டு படகுகள் மூலம் கடத்தி வரப்பட்டமை தெரியவந்ததுடன், அந்தப் படகுகளின் இரு இயக்குநர்களும் கைது செய்யப்பட்டு துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 49 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
