ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய இணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
பால் மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்திவிட்டு, பெற்றோல் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளமை அரசாங்கத்தின் தந்திரோபாய நடவடிக்கையாகும் என அவர் குற்றம் சாட்டினார்.அரசு சேவைகளை ஆன்லைனில் பெறுவது
முச்சக்கரவண்டி சேவைக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது சட்டமா அதிபரின் பரிசீலனையில் உள்ளன. சட்டமா அதிபரின் நடவடிக்கைக்குப் பிறகு அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்ட பின்னரே அது சட்டப்பூர்வமானதாக மாறும்.
இதனால் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையிடம் கட்டணத் திருத்தத்தைக் கோர முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், கட்டணக் கட்டுப்பாட்டு அதிகாரம் தற்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமே உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சட்டப்பூர்வமான புதிய கட்டணத் திருத்தம் வரும் வரை பழைய கட்டண அமைப்பே தொடரும் எனக் கூறிய அவர், தற்போதைய கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளார்.
முதலாவது கிலோமீற்றர்: 110 ரூபாய்
இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து: 90 ரூபாய்
இருப்பினும், முறையான சட்ட ஒழுங்குமுறை இன்னும் அமலுக்கு வராததால் வீதிகளில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் 110, 120 ரூபாய் எனப் பல்வேறு கட்டணங்களை அறவிட்டு வருவதாகவும், இந்த ஒழுங்குமுறையின் கீழ் விரைவில் முறையான கட்டணங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
