பிரபலமான ‘Rich Dad Poor Dad’ தனிநபர் நிதி மற்றும் சுயமுன்னேற்ற நூலின் ஆசிரியர் ரொபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
79 வயதான கியோசாகி, 1997ஆம் ஆண்டு வெளியான ‘Rich Dad Poor Dad’ நூல் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த நூல் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நேர்காணல்கள் மற்றும் இணைய ஒலிபரப்புகளில் பேசியுள்ள கியோசாகி, வருமானம் ஈட்டக்கூடிய சொத்துக்களை வாங்குவதற்காகக் கடனைப் பயன்படுத்துவது செல்வந்தர்கள் கடைப்பிடிக்கும் முதலீட்டு உத்திகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது முதலீட்டு முறையில், சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும்போது அவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறுவதும், சொத்துகளை விற்பனை செய்யாமல் அந்தக் கடன் தொகையைப் பயன்படுத்துவதும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், முதலீடுகளை தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதன் மூலம், ஒரு முதலீட்டில் ஏற்படும் இழப்பு மற்ற முதலீடுகளைப் பாதிக்காத வகையிலும் அவர் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது அணுகுமுறையை மற்றவர்கள் நேரடியாகப் பின்பற்றக் கூடாது என்றும், கடனைப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களைப் புரிந்துகொள்ள உரிய நிதிக் கல்வி அவசியம் என்றும் கியோசாகி எச்சரித்துள்ளார்.
இதனிடையே, கியோசாகியின் முன்னாள் மனைவியும் தொழில் பங்குதாரருமான கிம் கியோசாகி, இந்த 1.2 பில்லியன் டொலர் கடன் குறித்த தகவல்கள் பொதுவெளியில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்தக் கடன், பங்குதாரருடன் இணைந்து வைத்திருக்கும் சுமார் 1,500 அடுக்குமாடி குடியிருப்பு அலகுகளுடன் தொடர்புடையது என்றும், அது கியோசாகியின் தனிப்பட்ட கடன் பொறுப்பை நேரடியாகக் குறிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கியோசாகி குறிப்பிட்டுள்ள வருடாந்த வருமானம் 3 மில்லியன் டொலர் என்பது உண்மையானதாக இருந்தால், அவருக்குரிய கடன் பங்கு சுமார் 30 முதல் 60 மில்லியன் டொலர் வரையில் இருக்கலாம் என Vanity Fair தெரிவித்துள்ளது.
எனவே, கியோசாகி குறிப்பிடும் 1.2 பில்லியன் டொலர் என்பது அவரது மொத்த தனிப்பட்ட கடன் அல்ல; மாறாக, அவரது முதலீட்டு சொத்துக்கள் மற்றும் கூட்டுத் தொழில் கட்டமைப்புகளுடன் தொடர்புடைய கடன் தொகையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
