நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என நாமல் ராஜபக்ஷவின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் ரக விமானங்களைக் கொள்முதல் செய்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை (05) வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
நாமலைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம். எனினும் அவர் சிறையில் உள்ளார். எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கிறோம்.
அரசியல் தலைவராக இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நாமல் முன்னரும் முகங்கொடுத்துள்ளார். இது எமக்கு புதியதொரு விடயம் அல்ல.
இந்த கைதினால் எமது பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. இது கட்சி முன்னோக்கி நகர்வதற்கான ஒரு விடயம். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் நாமல் அரசியல் பணிகளை வழக்கம் போல் தொடர்வார் என மஹிந்த ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டினார்.
