நிலுவையில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் அரசாங்கத்துக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் இருந்த 4,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த நிலுவைத் தொகை வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (10) கண்டி மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், அரச பெருந்தோட்ட யாக்கத்தின் (SLSPC) சுமார் 3,000 ஊழியர்களுக்கு 1,961 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் (JEDB) 6,123 ஊழியர்களுக்கு 2,024 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும், எல்கடுவ தோட்ட நிறுவனத்தின் சுமார் 1,000 ஊழியர்களுக்கு 503 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும் வழங்கப்படவுள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் முதிய வயதிலும் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகச் சவால்களைக் கருத்தில் கொண்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும் என பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று கண்டியில் நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
