இந்தியா தலைமையின் கீழ் 18ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா நான்காவது முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், மாநாட்டை முன்னிட்டு புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் கொண்ட சர்வதேச அமைப்புகளுக்கு மாற்றாக 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு தற்போது 20 ஆண்டுகளை எட்டியுள்ளது.
18ஆவது உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரேசில், தென்னாபிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
கடந்த இரண்டு தசாப்தங்களில் பொருளாதார ஒத்துழைப்பைத் தாண்டி வர்த்தகம், முதலீடு, நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பிரிக்ஸ் அமைப்பு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய நிதி மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு மாற்றாக, வளர்ந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச அரங்கில் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பது பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு இடையிலான சில முரண்பாடுகள், அமைப்பின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா – உக்ரேன் போர், ஈரானைச் சுற்றியுள்ள மோதல்கள், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என சர்வதேச சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளமை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
