நாட்டில் வருடாந்தம் 900 தொடக்கம் 1,000 வரையிலான சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, வருடாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குணசேக்கர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
செப்டம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறுவர் புற்றுநோய் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறுவர் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியமாகும். பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களை விட சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மிக வேகமாக பரவக்கூடியவை. இதனால் நோயைக் கண்டறிவது தாமதமானால் சிகிச்சையளிப்பது கடினமாவதுடன், பக்கவிளைவுகளை ஏற்படுவதுக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
தெளிவுபடுத்த முடியாத மூன்று அறிகுறிகள் ஒரு குழந்தையிடம் காணப்பட்டாலோ, அல்லது ஒரு அறிகுறி ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்தாலோ, அல்லது ஒரு மாதத்திற்குள் நான்கு தடவைகளுக்கு மேல் ஒரே காரணத்திற்காக வைத்தியரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலோ புற்றுநோய் தொடர்பில் பரிசோதிப்பது அவசியமாகும்.
சிறுவர்களிடையே இரத்தப் புற்றுநோயான ‘லுகேமியாவே அதிகளவில் ஏற்படுகின்றது. காய்ச்சல், நிணநீர்ச் சுரப்பிகள் வீக்கமடைதல், பல் ஈறுகளில் இரத்த கசிவு, உடற் சோர்வு, வயிறு வீக்கம் போன்றன அறிகுறிகள் தென்படக் கூடும்.
இதுதவிர மூளை, கண், எலும்பு, சிறுநீரகம் மற்றும் தசைப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் பொதுவாக சிறுவர்களிடையே ஏற்படுகின்றன.
சிறுவர் புற்றுநோயைக் குணப்படுத்தும் சாத்தியக்கூறுகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதால், வைத்தியர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.
நோய் அறிகுறிகள் குறைந்ததும் சிகிச்சையை இடை நிறுத்துவது ஆபத்தான விடயமாகும் ஆகையால் பெற்றோர் இது குறித்து பொருப்புணர்வோடு செயற்பட வேண்டும்.
