எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்குக் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும் எனவும், எல் நினோ நிலைமையால் விவசாயத்திற்குச் சவால்கள் ஏற்படக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையமும் நீர் முகாமைத்துவ செயலகமும் எச்சரித்துள்ளதாக விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான பெரும்போக (மகப் பருவ) நெற்செய்கை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இதுபற்றி மேலும் கூறுகையில்,
நீரை உச்ச அளவில் முகாமைத்துவம் செய்து வெற்றிகரமான அறுவடையைப் பெற ஒக்டோபர் மாதத் தொடக்கத்தில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி நெற்செய்கைக்குத் தேவையான அளவு உரமும் விதை நெல்லும் போதியளவில் இருப்பதாகவும், இம்முறை பெரும்போக பருவத்தில் 8 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தேசிய உரச் செயலகமும் விவசாயத் திணைக்களமும் அறிவித்துள்ளன.
விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பரிந்துரைகளைப் பின்பற்றிச் சரியான வேளையில் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாயிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் 2026/27 மகப் பருவ நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகவும், நிலவும் வானிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்காகவும் வலய வாரியான கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்கூட்டியே நீரைப் பெறும் முதல் கட்டமாக ‘வலவ’ வலயத்தில் ஒக்டோபர் 01ஆம் திகதியும், அடுத்த கட்டமாக ‘அல்லா’ வலயத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதியும் செய்கை தொடங்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ‘கவுடுல்ல ‘வலயத்தில் நவம்பர் 01ஆம் திகதியும், ‘எலஹெர’ வலயத்தில் நவம்பர் 10ஆம் திகதிக்குள் இறுதி கட்டமாகவும் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும்
மேலும் இது தொடர்பில் ஏனைய தீர்மானங்களுக்கான முக்கிய ஒன்றுகூடல் எதிர்வரும் 18ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
