கம்பஹா – ஹொரகொல்ல பகுதியில் போதைப் பொருளுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) ஹொரகொல்ல மஹவத்த வீதியிலுள்ள குறித்த சிப்பாயின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் இலங்கை இராணுவத்தின் 5வது சிறப்புப் படையில் பணியாற்றும் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருப்பினும் இவர் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து விடுமுறை பெற்றுத் தங்கியிருந்தமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் இடம்பெறும் பிரதான போதைப் பொருள் விநியோகத்துடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
