கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்ட சி.டி.ஸ்கேன் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியைப் பயன்படுத்தி முறைகேடு இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட சி.டி.ஸ்கேன் இயந்திரமொன்றையே ‘சிறி லிய சவிய’ அறக்கட்டளை மூலமாக வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டமா அதிபர் சார்பில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்து வரும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸின் ஆலோசனைகளுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, சிறி லிய அறக்கட்டளையின் தலைவி ஷிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரைவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சிறுவர் வைத்தியசாலைக்கு இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக வங்கியிடம் நிதி பெறப்பட்டிருந்த போதிலும், சீன அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட இயந்திரமே சிறி லிய அறக்கட்டளையின் பெயரில் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பெறப்பட்ட நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
