மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையைப் பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் 1092 நாட்களைக் கடந்துள்ள போதிலும், இதுவரை தங்களுக்கான மேய்ச்சல் தரை தொடர்பில் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு உரிய மேய்ச்சல் தரைக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி பண்ணையாளர்கள் நேற்று (12) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும், அவற்றில் எந்தவொரு தீர்மானமும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தற்போதும் மயிலத்தமடு பகுதியில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளினால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங்கள் பயிர்ச்செய்கைக்கும் குடியேற்றத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பு நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கு போதிய நிலப்பரப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக் கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டத்தின் மூன்று வருட நிறைவை முன்னிட்டு, மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது நீண்டகாலக் கோரிக்கைக்கு இனியும் காலதாமதமின்றி நிரந்தரத் தீர்வை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
