சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவிற்கு 5½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால், மேலதிகமாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் இதன்போது நீதிபதி உத்தரவிட்டார்.
ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரரான ஜகத் சமந்த ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்தார். இதன் காரணமாக, இன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மாத்திரமே ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த சிலாபம் மேல் நீதிமன்றம், இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
