ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான செய்திகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 974,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம்ஸ் பணம் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்சிற்குத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த விசாரணையில், அந்த சேவை வழங்குநரின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டு வங்கி கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ தொடர்பாடல் ஊடாக போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், உண்மையான சேவை வழங்குநருடன் தான் தொடர்பில் இருப்பதாக நம்பி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இப்பணத்தை செலுத்தியுள்ளது.
மின்னஞ்சல் ஊடுருவல் கண்டறியப்பட்டவுடன், அந்த வங்கிக் கணக்கிற்கான மேலதிக கொடுப்பனவுகள் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், இது குறித்து டுபாய் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் ஊடுருவல் முற்றிலும் சேவை வழங்குநரின் கட்டுப்பாட்டிற்குள் நடந்ததொன்றாகும். எனவே, பணம் கிடைக்கப் பெறாமைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது என அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
அதேநேரம், இந்தியாவின் சென்னை காரியாலயத்தில் உள்ள நிதிப் பிரிவில் பணிபுரிந்த இந்தியப் பிரஜைகளான சில ஊழியர்கள், போலிப் பட்டியல்கள் மற்றும் போலிக் கையெழுத்துகளைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சுமார் 22 மில்லியன் இந்திய ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைமைப் பணிமனை, வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றங்களை அவதானித்து, உள்ளக விசாரணையை ஆரம்பித்தது.
உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் உடனடியாக இந்திய சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இழப்பீட்டை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
