ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி தங்கி சிகிச்சை பெறும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (19) முற்பகல் ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார்.
இங்கு பாதுகாப்புப் படையினர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.
