இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், பிரேசில் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போதைக்கு போதிய அளவு சீனி கையிருப்பு உள்ளதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என அந்த சங்கம் உறுதியளித்துள்ளது.
உள்நாட்டுத் தேவையை கருத்திற்கொண்டு கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த தடை காரணமாக இலங்கை புதிய சந்தைகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
இந்தியாவின் ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
நாட்டில் தற்போதைய நிலவரப்படி நுகர்வுக்குப் போதுமான அளவு சீனி இருப்பில் உள்ளது. அத்துடன், புதிய இருப்புகளை விரைவாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதால் சந்தையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பும் இல்லை.
தற்போது சந்தையில் சீனியின் விலை ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விலை உயர்வு இந்தியாவின் ஏற்றுமதித் தடையால் ஏற்பட்டது அல்ல. ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வடைந்தமையே இதற்கு காரணமாகும்.
புதிய இறக்குமதி திட்டங்கள் மூலம் சீனி விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இறக்குமதியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
